Pages

ராசியும் லக்னமும் ஒன்றாக

ராசியும் லக்னமும் ஒன்றாக அமையப்பெற்றவர்களுக்குரிய ஜோதிட பலன்கள்                                                                                                                                ஜாதகக் கட்டத்தில் ஒரு சிலருக்கு ராசியும் லக்னமும் அபூர்வமாக ஒன்றாக அமைந்து விடும். ராசியும் லக்னமும் ஒன்றாக அமையப்பெற்றவர்களுக்கு ஏற்படக்கூடிய  ஜாதக பலன்கள் 
மனிதர்களுக்கு எப்படி விதவிதமான குணங்கள் இருக்கின்றதோ, அதேபோல நவகிரகங்களுக்கும் விதவிதமான குணங்கள் உண்டு. ஆன்மிக ரீதியாக  மனித குணங்களை சாத்விகம், ராஜஸம், தாமஸம் என்று மூன்று வகைகளாக ஆன்றோர்கள் பிரிக்கிறார்கள். சாத்விகம் என்பது தெய்விக குணம், ராஜஸம் என்பது மனித குணம், தாமஸம் என்பதை அசுர குணம்..
சாத்விக குணம் உள்ளவர்கள், எந்தவித சூழ்நிலையிலும் நீதி, நேர்மை தவறாமல்  தர்மத்தின் வழி நடப்பார்கள்.  இது தெய்விக குணத்தைக் குறிப்பிடுகிறது
ராஜஸ குணம் உள்ளவர்கள், சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னையும் தன் மன நிலைக்கு ஏற்றவாறு தன் குணத்தையும் மாற்றிக்கொண்டு வாழ்வார்கள்.
தாமஸ குணம் உள்ளவர்கள் கபடம், சூது, வஞ்சம், பொறாமை, பொய், சூழ்ச்சி, பிறரை இம்சை செய்து அதில் சுகம் காண்பது போன்ற கெட்ட குணங்களுடன் இருப்பார்கள். இது அசுர குணம் எனப்படும். இந்த குணங்களுக்குரிய கிரகங்களை பார்ப்போம்.
சந்திரன், குரு, புதன் - சாத்விகம் - தெய்விக குணம்
சுக்கிரன், சூரியன், செவ்வாய்  - ராஜஸம் - மனித குணம்
சனி, ராகு, கேது - தாமஸம் - அரக்ககுணம்
ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறக்கிறாரோ அந்த நட்சத்திரத்துக்குரிய கிரகத்தின் குணங்களே அதிகம் இருக்கும். ஒரு சிலருக்கு ராசியின் குணம் இருக்கும். இன்னும் சிலருக்கு லக்னத்தின் குணம் இருக்கும். ஆனால், அபூர்வமாக ராசியும் லக்னமும் ஒன்றாக அமையப்பெற்றவர்களின் குணங்கள் சற்று வித்தியாசமாக இருக்கும்.
நாம் கண்ணில் காணக்கூடிய இரண்டே கிரகங்கள் ஒன்று தின கதியாக பூமி வலம் வரக்கூடிய சூரியன் என்னும் லக்னம், மற்றொன்று சந்திரன். இந்த லக்னமும் சந்திரனும் ஒரே ராசியில் இருப்பவர்களுக்கு லக்னாதிபதியும், ராசி அதிபதியும் ஒன்றுதான்.
இவர்களது அதிபதி, ஆட்சி, உச்சம், நட்பு நிலையில் வலுப்பெற்றால், பொது மக்கள் சேவை, அரசியல், சமூகப் புரட்சி என் ற வகையில் இவர்களது குணங்கள் அமையும். இவர்களுடைய வாழ்க்கையும் உயர்வாக பலரும் பாராட்டும் வகையில் அமையும். இவர்களிடம் முற்போக்குச் சிந்தனைகள் அதிகம் இருக்கும். ராசி லக்னாதிபதி பகை நீசம் பெற்றால், சுயநலத்தோடு வாழ்வார்கள்.
விசேஷ குணங்கள் :ராசியும் லக்னமும்
  எதிரியை உடனே மன்னிக்கும் மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் பழி வாங்கும் உணர்வு குறையாது.
 தான் எடுத்துக்கொண்ட லட்சியத்தில் ஒருபோதும் பின் வாங்க மாட்டார்கள். பொறுமையாகக் காத்திருந்து சமயம் பார்த்து இலக்கை அடைவார்கள்
  எந்த விதமான பிரச்னைக்கும் உடனே முற்றுப்புள்ளி வைத்து விட வேண்டும் என நினைப்பார்கள்.
 பொறாமை குணம் இருக்காது. எதைக் கண்டும் சலனம் இன்றி அமைதியாக, இருப்பார்கள்.
 கடந்த காலத்தைவிட எதிர்கால கணக்குகள் அதிகம் போட்டு வாழ்க்கையை நடத்துவார்கள்!
 பிறரது எண்ணம் அறிந்து நடப்பதில் வல்லவர்கள். அடிக்கடி தன்னைப் பற்றி தானே பெருமையாக நினைத்துக்கொண்டு சபாஷ் போட்டுக் கொள்வார்கள். இதனால் எப்போதும் உற்சாகமாக இருப்பார்கள்.
 இனிமையாகப் பேசினாலும், மற்றவர்களை கவரத் தெரியாதவர்கள். இதனால் பல வாய்ப்புகளை இழப்பார்கள்.
  நண்பர்களும் சரி, சொந்த பந்தங்களும் சரி இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள்தான் ஹீரோ.
 "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற வரிகளின் கதாநாயகர்கள் இவர்கள்தான். தங்களுக்கு வரும்  நல்லதுக்கும் கெடுதலுக்கும் இவர்களே காரணமாக இருப்பார்கள்.
ராசியும் லக்னமும் ஒன்றாகப் பெற்றவர்களின் குணங்கள் சாத்விகத் தன்மையே பெற்று இருக்கும். எந்த  ராசி, லக்னமாக இருந்தாலும்  சரி, குறிப்பாக பிறருக்கு உதவி செய்து உயர்வு காணும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.


No comments:

Post a Comment