Pages

கோடீஸ்வர யோகம்

யாருக்கெல்லாம் கோடீஸ்வர யோகம் உண்டாகும்? ஒருவர் பிறக்கும்போதே செல்வச் செழிப்பு மிகுந்த குடும்பத்தில் பிறப்பார்கள். அப்படிப் பட்டவர்களை, 'Born with silver spoon' என்று சொல்லுவார்கள். சிலர் பிறக்கும்போது எளிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், ஏதேனும் தொழில் செய்து பெரும் பணம் சேர்த்து கோடீஸ்வரராகத் திகழ்வார்கள். யாருக்கெல்லாம் கோடீஸ்வர யோகம் உண்டாகும்? செல்வமும் செல்வாக்கும் நிறைந்த கோடீஸ்வர குடும்பத்தில் பிறக்கவேண்டுமானால், லக்னத்துக்கு 4-ம் இடமான சுகஸ்தான அதிபதி, செவ்வாய், 9 மற்றும் 10-ம் இடத்து அதிபதிகள் தங்கள் சொந்த வீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ சுப பலம் பெற்று இருக்கவேண்டியது அவசியம். இந்த அமைப்பில் பிறக்கும் குழந்தைகளின் முன்னோர் பரம்பரையாகவே செல்வமும் செல்வாக்கும் பெற்றிருப்பார்கள்.
லக்னத்துக்கு 9-ம் இடத்துக்கு அதிபதியான கிரகமும், குருவும் இணைந்து 1,4,7,10 ஆகிய இடங்களிலோ அல்லது 5,7,9 ஆகிய இடங்களிலோ இருக்கும் அமைப்பில் பிறந்தவர்களும், பிறக்கும்போதே கோடீஸ்வரராகத் திகழ்வார்கள்.கிருஷ்ண துளசி

9-ம் இடத்து அதிபதி சுபகிரகங்களுடன் இணைந்து, லக்னாதிபதியும் பலம் பெற்று இருக்கும் ஜாதகர்கள் தந்தையின் மூலமாக செல்வம் கிடைக்கப் பெறுவார்கள். பாக்கியஸ்தானமாகிய 9-ம் இடத்து அதிபதி கேந்திரத்தில் இருந்து, அந்த ஸ்தானமே 9-ம் இடத்து அதிபதியின் சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருந்தால், அந்த ஜாதகர் பல வித யோகங்களைப் பெற்று வாழ்வார்கள்.

சுப கிரகங்கள் ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தாலும், ஒன்றுக்கொன்று பரிவர்த்தனை பெற்று அமர்ந்திருந்தாலோ செல்வ வளம் உண்டாகும். மிக அபூர்வமாக ஒரு சிலருக்கு வாழ்வின் பெரும் பகுதி சுப கிரகங்களின் தசை நடக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டாகும். இது மிகவும் அபூர்வமாக நேரிடக்கூடிய வாய்ப்பு. அப்படி அமைந்தால், அந்த ஜாதகர் கடைசிவரை நிறைந்த செல்வத்துடன் வாழ்வார்கள்.

   ஒவ்வொருவருக்கும் லக்னாதிபதி, ராசியாதிபதிகளின் தசை நடக்கும்போது, ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல பல திருப்பங்கள் ஏற்படும். அபரிமிதமான வளர்ச்சி, செல்வம், செல்வாக்கு, மற்றவர்களால் புகழப்படும் வாழ்க்கை என்று நல்ல பலன்கள் உண்டாகும்.

குருவும் கேதுவும் இணைந்திருக்கும் ஜாதகர்கள், திடீர் யோகத்தால் கோடீஸ்வரராகத் திகழ்வார்கள். ஆனால், குருவும் கேதுவும் இணைந்திருக்கும் இடம் குருவின் ஆட்சி வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருக்கவேண்டியது முக்கியம். மேலும் குருவும் கேதுவும் கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ இணைந்திருக்கவேண்டும். அப்போதுதான் சுப பலன்கள் உண்டாகும். கேதுவுக்கு குருவின் பார்வை ஏற்படுவதும் கோடீஸ்வர யோகத்தைத் தரும்.  ஒருவர் தான் செய்யும் தொழிலால் கோடீஸ்வரராக ஆகவேண்டுமானால், தொழில் ஸ்தானமான 10-ம் இடத்து அதிபதியும், லாப ஸ்தானமான 11-ம் இடத்து அதிபதியும் சுப கிரகங்களின் பார்வை பெற்றிருந்தாலும், இரண்டு கிரகங்களும் இணைந்து சுகஸ்தானமான 4-ம் வீட்டிலோ அல்லது 9-ம் இடமான பாக்கியஸ்தானத்திலோ  சுப பலம் பெற்று இருக்கவேண்டியது அவசியம். 10-ம் இடத்துக்கு அதிபதி, 11-ம் இடத்துக்கு அதிபதி ஆகிய கிரகங்களுக்கு 4-ம் இடத்து அதிபதியின் பார்வையோ அல்லது 9-ம் இடத்து அதிபதியின் பார்வையோ பட்டாலும் தொழில் மூலம் பெரும் பொருள் சம்பாதிக்கமுடியும்.

4-ம் இடத்துக்கு சுபகிரகத்தின் பார்வை பட்டாலோ, 4-ம் இடத்தில் லக்னாதிபதியோ, 2,5,9,11-ம் வீட்டுக்கு அதிபதிகள் இருந்தாலோ வாழ்க்கையில் செல்வ சுகத்துக்குப் பஞ்சமே இருக்காது. பூர்வ புண்ணியஸ்தானமான 5-ம் இடத்துக்கு அதிபதி, தனஸ்தானமாகிய 2-ம் இடத்துக்கு அதிபதி ஆகிய கிரகங்களின் தசா புக்திகள் சுபகிரகத்தின் பார்வையுடன் நடைபெற்றால், செல்வமும் செல்வாக்கும் மிக்க வாழ்க்கை ஏற்படும்.

   பானை பிடித்தவள் பாக்கியசாலி' என்று சொல்வார்கள். அதாவது மனைவி வந்த நேரம் வாழ்க்கையில் செல்வம் சேரும் என்பது அர்த்தம். ஒருவருக்கு மனைவியால் மட்டும்தான் செல்வம் சேரும் என்று சொல்லமுடியாது. சிலருக்கு தாயின் மூலம் செல்வம் சேரும். சிலருக்கு தந்தை மூலம் செல்வம் சேரும். இன்னும் சிலருக்கு சகோதரர்கள் மூலம் செல்வம் சேரும். உதாரணமாக சந்திரன் பலம் பெற்று இருந்தால் தாய் மூலம் செல்வம் சேரும். சூரியன் பலம் பெற்று இருந்தால் தந்தை மூலமும், செவ்வாய் பலம் பெற்று இருந்தால் சகோதரர்கள் மூலமும், புதன் பலம் பெற்று இருந்தால் தாய்மாமன் மூலமும், குரு பலம் பெற்று இருந்தால் புத்திரர்களாலும், சுக்கிரன் பலம் பெற்று இருந்தால் வாழ்க்கைத்துணையாலும் செல்வம் சேரும்.


No comments:

Post a Comment