Pages

ராஜயோகம் தரும் ராகு

ராஜயோகம் தரும் ராகு ........                                                வாழ்வின் உச்ச நிலைக்கு ஒருவரைக் கொண்டு செல்லும் ராஜயோக ராகுவின் தசையைப் பற்றிப் பார்க்கலாம்.
ஒருவரை அரசனுக்கு நிகரானவராக மாற்றும் ராஜயோகத்தை ராகு தனது தசையில் செய்ய வேண்டுமெனில் அவர் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து வீடுகளில் ஏதேனும் ஒன்றில் இருக்க வேண்டும் என்பது முக்கிய விதி.

மேலும் இந்த வீடுகள் லக்னத்திற்கோ, ராசிக்கோ மூன்று, ஆறு, பத்து, பதினொன்றாமிடங்கள் என்று சொல்லப்படுகின்ற உபசய வீடுகளாகவும் அமைய வேண்டும் என்றும் நமது மூல நூல்கள் வலியுறுத்திச் சொல்கின்றன.

  மறைவு ஸ்தானங்களின் இறுதி வீடான பனிரெண்டாமிடத்தில் அமரும் ராகுவும் ராஜ யோகத்தைத் தருவதாக   ஆய்வு நூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

எனவே நான் மேலே சொன்ன மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய வீடுகள் ஒருவரின் லக்னத்திற்கோ, ராசிக்கோ மூன்று, ஆறு, பத்து, பதினொன்று, பனிரெண்டாமிடங்களாக அமைந்து அங்கு ராகு அமரும் போது சுயமாக ராஜயோகத்தைத் தருவார்.

மேற்சொன்ன வீடுகளில் ஏதேனுமொன்றில் ராகு அமர்ந்து, ராகுவுக்கு வீடு கொடுத்தவன் சுபவலு அடைந்து, ராகு சுபருடன் குறிப்பிட்ட டிகிரியில் இணைந்து, சுபரின் பார்வை பெற்று, நல்ல சார அமைப்புடனும், நவாம்சத்தில் சுபவலுவும் பெற்றிருக்கும் நிலையில் ஒருவரை அரச நிலைக்கு உயர்த்துவார்.

மேலும் ராகு தன்னோடு இணைந்த கிரகங்களின் வலுவைக் கவர்ந்து தனது தசையில் செய்பவர் என்பதால், சுபர்களோடு இணையும் பட்சத்தில் சேர்ந்த கிரகங்களின் முழு ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவங்களை தானே வலுவுடன் தருவார்.

வலுப் பெற்ற ராகுவின் தசையில் ஒருவருக்கு ஆயிரம் யானைகளின் பலம் உண்டாகும். எவராலும் எதிர்க்க முடியாத, வெல்ல முடியாத அமைப்பில் ஜாதகர் இருப்பார். இதுபோன்ற பலம் வாய்ந்த ராகுவின் தசை ஒருவரை சமுதாயத்தில் மிகவும் பிரபலமாக்கி உச்சத்தில் கொண்டு சென்று வைக்கும்.


No comments:

Post a Comment