Pages

அண்டசராசர ரகசியங்கள்

அண்டசராசர ரகசியங்கள்
உங்கள் உள்ளங்கையில் பொத்தி வைத்தபடி, சுருங்கிய நிலையில் ஒரு பலூன் இருக்கிறது. அதை எடுத்து ஊதுகிறீர்கள். நிறையக் காற்று ஊதக்கூடிய பலூனாக இருந்தாலும், ஓரளவு பெரிதாகிய பின்னர் ஊதுவதை நிறுத்திவிடுகிறீர்கள். அதற்குமேல் ஊதினால் வெடித்துவிடலாமென்ற பயம் காரணமாகவோ அல்லது ஊதிய பருமன் போதுமென்று நினைத்ததாலோ, ஊதுவதை நிறுத்திவிட்டிருப்பீர்கள். சரி, இப்போது அந்தப் பலூனுக்கு என்ன நடக்கும்? அந்தப் பலூன் அந்தப் பருமனிலேயே நிலையாக இருக்க வேண்டுமென்று நீங்கள் நினைத்தால், அதன் வாயை இறுக்கக் கட்டிவிடுவீர்கள். பலூனின் பருமன் மாறாமல் நிலையாக அப்படியே இருக்கும். இதுதான் வழமையும் கூட. ஆனால், இதைவிட வேறு இரண்டுவிதமான சம்பவங்களும் அந்தப் பலூனுக்கு நடக்கலாம். ஒன்று, அந்தப் பலூனை உங்களால் முடிந்தளவு ஊதிக்கொண்டே போவது. அது பருமனாகிப் பருமனாகி, ஒருநிலையில் காற்றின் அழுத்தம் தாங்க முடியாமல் வெடித்துச் சிதறும். இரண்டாவது, ஊதியது போதும் என்ற நிலையில் பலூனிலிருந்து வாயை எடுக்க, அதில் ஊதப்பட்ட காற்று, படிப்படியாக வெளியேறிச் சுருங்கியதொரு பலுனாகப் பழைய நிலைக்கு மாறும். இந்த மூன்று சம்பவங்களையும் கொண்ட செயற்பாடுகளைப் பலூன் உள்ளடக்கியிருக்கிறது.

இதைப் பற்றிச் சொல்லும்போது, சிறுபிள்ளைத்தனமாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், விரிவடையும் பேரண்டத்திற்கே இது உதாரணமாகச் சொல்லப்படுகிறது. விரிவடையும் பேரண்டம் மர்மங்களையும், ஆச்சரியங்களையும் கொண்டது. "அண்டம் விரிவடைவதில் ஆச்சரியம் இருக்கலாம். அதிலென்ன மர்மம் இருக்கப் போகிறது?" என்று நீங்கள் நினைப்பீர்கள். அது என்ன மர்மமென்று சொல்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். அதுமட்டுமல்ல, அந்த மர்மம் ஏதோ ஒரு வகையில் ஆன்மீகத்தையும் தொட்டுச் செல்வது இன்னுமொரு ஆச்சரியம். அந்த மர்மம் என்னவென்று நாம் இப்போது பார்க்கலாம். அதற்கு முன்னர், பேரண்டம் என்னும் சுருங்கிய நிலையில் இருந்த பலூன், எப்படிப் பெரியதொரு பலூனாக ஊதப்பட்டது என்பதைப் பார்த்துவிடலாம்.
'காலம்' (Time), 'இடம்' (Space) ஆகிய இரண்டுமேயில்லாத ஒரு இடத்தில், நீங்கள் இருப்பதாக உங்களால் கற்பனை செய்யமுடியுமா? 'இடம்' இல்லாத ஒரு இடத்தில் எப்படி இருக்க முடியும்? சரி, இந்தக் கேள்வியை இப்படிப் புரிந்து கொள்வோம். உங்கள் வீட்டில் நீங்கள் இப்போது இருக்கிறீர்கள். உங்கள் வீடு சென்னையில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். சென்னையிலிருக்கும் வீட்டில் நீங்கள் இருப்பதை உங்களால் கற்பனை பண்ண முடியுமல்லவா? சென்னை, இந்தியாவில் இருக்கிறது. இந்தியா பூமியிலும், பூமி சூரியக் குடும்பத்திலும் இருக்கிறது. சூரியக் குடும்பம் பால்வெளிமண்டலத்திலும், பால்வெளிமண்டலம், பேரண்டத்திலும் இருக்கிறது.

இப்பொழுது யோசித்துப் பாருங்கள். இந்தப் பேரண்டத்தில் எங்கோவொரு மூலையில் நுண்ணியதொரு புள்ளியாக நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள் என்பது புரியும். திடீரென ஒருகணத்தில், பேரண்டமே காணாமல் போய்விடுகிறது. பூமி மட்டும் சுற்றிக் கொண்டிருக்கிறது. பூமியைத் தவிர எங்கும், எதுவும் இல்லை. இந்த நிலையைக்கூட, உங்களால் கற்பனை பண்ணிப் பார்க்க முடியும். இப்போது பூமியும் படிப்படியாக மறையத் தொடங்குகிறது. உங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே மறைந்து போகின்றன. இறுதியில் உங்கள் வீடும், நீங்கள் நிற்கும் தரையும் இல்லாமல் போகின்றது. ஆனால் நீங்கள் மட்டும் இருக்கிறீர்கள். உங்களைச் சுற்றியோ, மேலேயோ, கீழேயோ எதுவுமில்லை. எதுவுமில்லையென்றால், எதுவுமேயில்லை. முழுமையான வெற்றிடம். அதை வெற்றிடம் என்று கூடச் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அங்கு வெற்றிடம் என்ற ஒன்று இருக்கிறது என்றாகிவிடும். அதனால் வெற்றிடம் கூட அங்கில்லை. அது என்ன நிலையென்றே சொல்ல முடியாத ஒரு நிலை. அந்த நிலையில் நீங்கள் நிற்கிறீர்கள். எந்தச் செயலையும் செய்ய முடியாத ஒரு உறைந்த நிலையாக அது இருக்கும். நீங்கள் நடக்க முடியாது. நடப்பதற்குத்தான் இடமில்லையே! பார்க்க முடியாது. பார்ப்பதற்கு ஒளியுமில்லை, பொருட்களுமில்லை. பேச முடியாது. பேச்சைக் கடத்தும் காற்று அங்கில்லை. அதேபோல, எதையும் கேட்கவும் முடியாது. மொத்தத்தில் எதுவும் செய்ய முடியாது. அங்குக் காலம் (நேரம்) என்பது கூட இல்லை. காலம் என்பதற்கான எந்த அர்த்தமும் அங்கில்லை. இப்போது முதலில் நான் கேட்டிருந்த கேள்வியை மீண்டும் பாருங்கள். காலம், இடம் இரண்டுமில்லாத ஒரு நிலையில் நீங்கள் இருப்பதாக உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லையல்லவா? ஆனால் கற்பனையே பண்னமுடியாத அப்படியானதொரு நிலை உண்மையில் இருந்துதானிருக்கிறது. இன்றிலிருந்து கிட்டத்தட்ட 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நிலை இருந்திருக்கிறது. அந்த நிலையில் பேரண்டம், ஒரு அணுவைவிடச் சிறிய புள்ளியாகச் சுருங்கி இருந்திருக்கிறது. பேரண்டம் சிறுபுள்ளியாகச் சுருங்கியிருந்த நிலையை 'ஒருமை நிலை' (Singularity) என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன், மிகமிகச்சிறியதொரு புள்ளியாக ஒடுங்கியிருந்த ஏதோவொன்று, ஒரு குறித்த கணத்தில் திடீரெனப் பிரமாண்டமாக வெடித்துச் சிதறியது. வெடிப்பு என்றால் வெடிப்பு. மனிதனால் கற்பனையே பண்ணிக் கொள்ள முடியாதவொரு பெருவெடிப்பு. கோடானகோடி அணுகுண்டுகளை ஒன்றாய்ச் சேர்த்து வெடித்தது போல இருந்த அந்தப் பெருவெடிப்பைத்தான் 'பிக்பாங்க்' (Bigbang) என்கிறார்கள். வெடித்த அடுத்த நொடியிலேயே அது பேரண்டமாக விரிவடைந்தது. மிகச் சிறியதொரு புள்ளி ஒரு நொடிக்கும் குறைந்த நேரத்துக்குள் பேரண்டமாக விரிவடைந்தது. அதனாலேயே பல விஞ்ஞானிகள் இதைப் 'பெருவெடிப்பு' என்று சொல்வதற்குப் பதில் 'பெருவிரிவு' (Expansion) என்கிறார்கள். வெடிக்கும் கணத்தில் அந்த இடத்திலிருந்த வெப்பநிலை என்ன தெரியுமா? ஒன்றுடன் 32 பூச்சியங்களைச் சேர்த்தால் எவ்வளவு பெரிய இலக்கம் வருமோ, அந்தளவு சதமபாகை (°C) வெப்பநிலை அங்கேயிருந்தது. நம்பவே முடியாத வெப்பநிலை. திடீரென வெப்பநிலை உயர்ந்து, சடுதியாக வெடித்து, விரிவடைந்த அண்டம் அதே வேகத்தில் குளிரடையவும் ஆரம்பித்தது. வெடித்த ஒன்றரை நிமிடத்தில் வெப்பநிலை பில்லியன் சதமபாகையாகக் குறைந்துபோனது. தொடர்ந்து 56,000 வருடங்களின் பின்னர் 8700°C ஆகக் குறைந்தது. இன்றும் அண்டம் முழுவதும் அந்த வெப்பநிலை பரந்துபோய் இருக்கிறது. இன்று அதன் வெப்பநிலை -270°C ஆகக் குறைந்திருக்கிறது.

பேரண்டம் இப்படித்தான் உருவாகியது என்று அறிவியல் சொல்லும்போது, பலரால் நம்ப முடியாமல் இருக்கிறது. கோடிக்கணக்கான நட்சத்திரக் கூட்டங்களையும், நட்சத்திரங்களையும், கோள்களையும் கொண்ட இந்தப் பேரண்டம், ஒரு சிறுபுள்ளியாக எப்படிச் சுருங்கியிருந்திருக்க முடியும் என்ற கேள்வி சந்தேகமாக அவர்களால் முன்வைக்கப்படுகிறது. ஆனால், அறிவியல் இந்தச் சந்தேகங்களைச் சுலபமாகத் தீர்த்துவைக்க முயன்றாலும், சிக்கலான அறிவியல் விளக்கங்களைப் புரிந்துகொள்ளச் சிலரால் முடிவதில்லை. அந்த விளக்கம் என்னவென்று நாமும் பார்த்துவிடலாம். தமிழால், எந்தச் சிக்கலான அறிவியலையும் இலகுவாகப் புரியவைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. உங்களுக்கு முன், நூறு கிலோ எடையுள்ள சதுரமான இரும்புத்துண்டு ஒன்று இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த இரும்புத்துண்டு, இரும்பு அணுக்களால் உருவானது என்பது உங்களுக்குத் தெரியும். அந்த இரும்புத் துண்டை உடைத்துச் சிதைத்து வரும் மிகமிகச்சிறிய துகளைத்தான் 'இரும்பு அணு' (Fe) என்கிறோம். செங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக வரிசையாக அடுக்கி அழகியதொரு வீடு கட்டுவது போல, கோடிக்கணக்கான இரும்பு அணுக்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்த இரும்புத்துண்டு. நாம் அதில் ஒரு இரும்பு அணுவை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு அணுவில், அணுக்கருவும் (Nucleus), அதைச் சுற்றியபடி எலக்ட்ரான்களும் (Electron) இருக்கும். சரி, அந்த அணுவை ஒரு கிரிக்கெட் மைதானமளவு பெரியது என்று இப்போது கற்பனை செய்து கொள்ளுங்கள். அபடியெனில், அதன் அணுக்கரு அந்த மைதானத்தின் நடுவே கிடக்கும் ஒரு கிரிக்கெட் பந்தின் அளவாகத்தான் இருக்கும். ஒரு அணுவின் பருமனில் கோடி மடங்கைவிடச் சிறியதாகவே அணுக்கரு இருக்கும். அணுக்கருவுக்கும் எலெக்ட்ரான்களுக்குமிடையில் இருப்பது மிகப்பெரிய வெற்றிடம். எலெக்ட்ரான்களுக்கு எடை கிடையாது. அதனால், அணுவின் எடை அணுக்கருவிலேயே இருக்கிறது.

இப்போது இந்த உதாரணத்தின்படி பாருங்கள். ஒரு கிரிக்கெட் மைதானத்தின் மொத்த எடையும், அதன் மையத்தில் உள்ள கிரிக்கெட் பந்தில்தான் உள்ளது. அதாவது ஒரு அணுவின் எடை என்பது அந்த அணுவின் கோடி மடங்கு சிறிய அணுக்கருவில்தான் இருக்கிறது. இப்போது, மேலே சொல்லப்பட்ட நூறு கிலோ இரும்புத்துண்டை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பேச்சுக்கு அந்த நூறு கிலோ இரும்புத்துண்டில் மொத்தமாக ஒரு கோடி இரும்பு அணுக்கள் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் (மீண்டும் சொல்கிறேன் ஒரு பேச்சுக்குத்தான்). இரும்புத்துண்டின் மொத்த எடையும், கோடி இரும்பு அணுக்களில்தான் இருக்கும். அதாவது, கோடி இரும்பு அணுக்கருக்களில் இருக்கும். இப்போது நாம் அந்தக் கோடி அணுக்கருக்களையும் ஒன்று சேர்த்தோமென்றால், ஒரு குண்டூசி முனையளவைவிடச் சிறியதாகவே இருக்கும். ஆனால் அந்தக் குண்டூசி முனையளவிருக்கும் அணுக்களை நம் கைகளால் தூக்கவே முடியாது. காரணம் அது நூறு கிலோ எடையுள்ளதாக இருக்கும். அதோடு மிகவும் அடர்த்தியானதாகவும் இருக்கும். இப்போது, அண்டத்தில் உள்ள அனைத்து அணுக்களையும் எடுத்து, அவற்றில் உள்ள எலெக்ட்ரானை அகற்றிவிட்டுப் பார்க்கும்போது, எஞ்சுவது கைமுனையளவு அணுக்கருக்களாகத்தான் இருக்குமென்பது புரிகிறதா? ஆனால், அறிவியல் தன் விளக்கத்தை இத்துடன் முடித்துவிடவில்லை. அது அணுக்கருக்களையும் பிரித்து, அங்கு உள்ளவை அனைத்தையும் மேலும் கண்டு கொள்ள முயன்றது.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு பொருளைப் பிரித்தால் வரும் மிகச்சிறிய பகுதியை 'அணு' (Atom) என்று கண்டுபிடித்தார்கள். அணுவைப் பிரிக்கவே முடியாதென்றுதான் ஆரம்பத்தில் நினைத்தார்கள். ஆனால் அணுவைப் பிளந்து, அதனுள் அணுக்கருவும், இலத்திரனும் இருக்கின்றன என்று கண்டுபிடித்தார்கள். பின்னர் அணுக்கருவுக்குள் புரோட்டான் (Proton) என்னும் துகளும், நியூட்ரான் (Neutron) என்னும் துகளும் இருக்கின்றன என்று கண்டுபிடித்தார்கள். ஆனால், அறிவியலின் தாகம் அத்தோடு தீர்ந்துவிடவில்லை. அந்தப் புரோட்டானையும், நியூட்ரானையும் கூடப் பிரித்துப் பார்த்தது அறிவியல். புரோட்டான், நியூட்ரான் ஆகிய இரண்டுமே குவார்க் (Quark) என்றழைக்க்கப்படும் மிகநுண்ணிய துகள்களால் உருவாக்கப்பட்டிருக்கிறன என்று சமீபத்தில் கண்டுபிடித்தார்கள். குவார்க்குகளில் இதுவரை ஆறுவகைக் குவார்க்குகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், புரோட்டானிலும், நியூட்ரானிலும் இரண்டு வகையான குவார்க்குகளே இருக்கின்றன. அவை 'மேல்க்குவார்க்' (Up Quark), கீழ்க்குவார்க் (Down Quark) எனப் பெயரிடப்பட்டிருக்கின்றன. ஒரு புரோட்டானில் இரண்டு மேல்க்குவார்க்குகளும், ஒரு கீழ்க்குவார்க்குமாக மொத்தமாக மூன்று குவார்க்குகள் காணப்படுகின்றன. இதுவே தலைகீழாக, நியூட்ரானில் இரண்டு கீழ்க்குவார்க்குகளும், ஒரு மேல்க்குவார்க்கும் காணப்படுகிறது.

பூமியிலிருக்கும் பொருட்கள் யாவும் அணுக்களால் உருவானவை என்று நமக்குத் தெரியும். அதனால் இப்போது நாம் பொருட்களெல்லாம் குவார்க்குகளாலானவை என்று சொன்னால் தப்பேயில்லை. ஒரு பொருளுக்கு எடையைக் கொடுப்பது அணுக்கருவென்பதாலும், அதனுள் புரோட்டானும், நியூட்ரானும் இருப்பதாலும், ஒரு பொருளுக்கு எடையைக் கொடுப்பது குவார்க்குகள்தான் என்னும் முடிவுக்கு நாம் வரலாம். இந்தக் குவார்க்குகளின் பருமன் என்ன தெரியுமா? ஒன்றிற்கு அருகே 17 பூச்சியங்களுடன் வரும் இலக்கத்தின் ஒருபங்கு, மில்லிமீட்டர். அதாவது 0.00000000000000001மிமீ நுண்ணளவுடையது. 800 கிலோமீட்டர் வட்டமான நிலப்பரப்பைக் கொண்ட மிகப்பெரிய மாநிலத்தை, ஒரு அணுவாக நீங்கள் எடுத்துக் கொண்டால், நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்தக் கட்டுரையில் இருக்கும் ஒரு தமிழ் எழுத்தின் அளவுதான், ஒரு குவார்க்கின் அளவாக இருக்கும். குவார்க் என்பது எந்த அளவு சிறியது என்பதை நீங்கள் இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள். இந்தப் பேரண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களின் குவார்க்குகளையும் ஒன்று சேர்த்தால், பிக்பாங்க் பெருவெடிப்பின் ஆரம்பப் புள்ளியின் சிறிய அளவை உங்களால் இப்போது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். எல்லாக் குவார்க்குகளும் ஒன்றாகச் சேர்ந்து, ஒரு புள்ளியாகிப் பெருவெடிப்பாக வெடித்தது என்றுதான் அறிவியல் சொல்கிறது. இந்த இடத்தில்தான் நவீன அறிவியல் 'குவாண்டம்' (Quantum) என்னும் புதியதொரு பரிமாணத்தை எடுத்தது. குவாண்டம் அணுவின் அடிவேரையே ஆராயத் தொடங்கியது.

இயற்பியல் மற்றும் கணித விதிகளின்படி, மறுக்க முடியாத கோட்பாடுகளை (Theory) அமைத்து, தனக்கென ஒரு தனிவழியில் குவாண்டம் இயற்பியல் சென்றுகொண்டிருக்கிறது. குவாண்டம் இயற்பியல் நிறுவும் கோட்பாடுகள் அனைத்துமே மந்திரங்கள் நிறைந்ததொரு மாய உலகில் வசிப்பது போன்ற பிரமையையே நமக்கு ஏற்படுத்தும். நம்பவே முடியாத ஆச்சரியங்களும், வியப்புகளும், மர்மங்களும் நிறைந்தது குவாண்டம் உலகு. நாம் வாழ்வதாக நினைத்துக் கொண்டிருப்பதே, அண்டவெளியில் இருக்கும் கருந்துளைகளிலிருந்து வெளிவரும் ஹோலோகிராம் (Hologram) காட்சிகள்தான் என்கிறது குவாண்டம். அதுமட்டுமில்லை, 'யூனிவேர்ஸ்' (Universe) என்று சொல்லப்படும் 'ஒரே அண்டம்' என்று சொல்வதே தவறு, நம் அண்டத்தைப் போலக் கோடிக்கணக்கான அண்டங்கள் உள்ளன என்கிறது குவாண்டம். அதனை 'மல்ட்டிவேர்ஸ்' (Multiverse) என்றும் அழைக்கிறது.

சமுத்திரத்தில் உள்ள நீரில் எவ்வளவு நீர்க்குமிழிகள் இருக்கின்றனவோ, அதைவிட அதிக அளவில் அண்டங்கள் இருக்கின்றன என்கிறது. நம்முடைய அண்டத்தை அப்படியே காப்பியடித்தது போலப் பல அண்டங்களும் இருக்கின்றன என்கிறது. அந்த அண்டங்களிலும் நாம், இங்கு வாழ்வது போல, அங்கும் வாழ்ந்து கொண்டிருப்போம் என்கிறது. "என்ன இது சுத்தப் பேத்தலாக இருக்கிறது. இவர் ஏன் இப்படி உளறுகிறார்?" என்று நீங்கள் இப்போது நினைக்கலாம். ஆனால் இவை அனைத்தும் கணிதச் சமன்பாடுகளைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் கோட்பாடுகள். உலகில் உள்ள விஞ்ஞானிகளில் பெரும்பான்மையினர் ஏற்றுக் கொண்ட கோட்பாடுகள்தான் இவை. குவாண்டத்தின் முடிவுகள் ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்லும் போதும், அவை தனித்தனியே பிரமிக்க வைக்கும் மர்மக் கதைகள்போல இருக்கும். படிக்கப் படிக்கச் சுவாரஷ்யமாக இருக்கும். ஆனால், இந்தக் கட்டுரை குவாண்டம் பற்றிச் சொல்வதற்கானதல்ல. பிறிதொரு சமயத்தில் அதற்கான வாய்ப்புகள் அமையும் பட்சத்தில் குவாண்டம் பற்றி நாம் விரிவாகவே பார்க்கலாம்.

இப்போது, நம் கட்டுரைக்கான அளவுக்குக் குவாண்டம் என்ன சொன்னதோ அதை மட்டும் பார்த்துவிட்டு மேலே செல்வோம். குவார்க்குகளையும் பிரித்து, அதனுள் என்ன இருக்கின்றது என்ற ஒரு கோட்பாட்டைக் குவாண்டம் இயற்பியல் வெளியிட்டது. அந்தக் கோட்பாடுதான் மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்திய 'அதிர்விழைக் கோட்பாடு' (String Theory) ஆகும். அறிவியலையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட கோட்பாடு அது. அதன் தாக்கத்தை இன்றும் பல விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ள முடியாமல்தான் இருக்கிறது. இப்போது நாம் அதிர்விழைக் கோட்பாடுபற்றி முழுமையாகப் பார்க்காவிட்டாலும், அதன் அடிப்படையைப் பார்த்துவிடலாம். 'அதிர்விழைக் கோட்பாடு' என்ன சொல்கிறதென்றால், அணுவில் உள்ள மிகச் சிறிய குவார்க்கைப் பிரித்துப் பார்த்தால், பெரும்பாண்மையான பகுதி வெற்றிடமாக இருக்க, அதனிடையே மிகச்சிறிய இழைகள் அதிர்ந்தபடி (இசைத்தபடி) மிதந்து கொண்டிருக்கின்றன. அதாவது ஒரு வீணையின் தந்திக் கம்பிகள் அதிர்வது போல, மிக நுண்ணிய இழைகள் அங்கே அதிர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த 'அதிர்விழை' (String) மனிதனால் அளவிடவே முடியாத ஆகச்சிறிய அளவான 'பிளாங்க் அளவைக்' (Planck length) கொண்டது. ஒன்றுடன் 32 பூச்சியங்கள் சேர்த்தால் வரும் இலக்கத்தின் ஒரு பங்கு மில்லிமீட்டர்தான் ஒரு 'பிளாங்க் அளவு' என்கிறார்கள். அதாவது தசமப் புள்ளியுடன் 32 பூச்சியங்களைச் சேர்த்து வரும் எண் அது. 'மாக்ஸ் பிளாங்க்' (Max Planck) என்னும் ஜேர்மன் இயற்பியலாளரால் கண்டுபிடிக்கபட்ட ஒரு மாறிலி எண்தான் இந்த 'ப்ளாங்க் அளவு' என்று சொல்லப்படுகிறது. குவாண்டம் இயற்பியலின் செயற்பாடுகள் கூட இந்தச் சிறிய அளவீட்டுத் தளத்திலேயே ஆரம்பமாகின்றது.

அண்டம் எந்த அளவுக்குப் பிரமாண்டமானதோ, அதற்கு எதிரான அளவில் குவாண்டம் மிக நுண்ணியது. ஆனால் ஆச்சரியமாக, அண்டத்தில் நட்சத்திரங்கள், கோள்கள், காலக்ஸிகள், கருந்துளைகள் எனக் கோடானகோடி பொருட்கள் இயங்குவது போல, அணுவுக்குள் குவாண்ட அளவில் கோடானகோடி உபஅணுத்துகள்கள் (Subatomic Particles) இயங்கிக் கொண்டிருக்கின்றன. சொல்லப் போனால், அணுவுக்குள்ளும் ஒரு அண்டம் இருக்கிறதாகச் சொல்கிறார்கள். "அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும்" என்று நம்முன்னோர்கள் இதைத்தான் சொன்னார்களோ தெரியவில்லை. குவாண்டம் சொல்வதைப் போல, அணுவுக்குள் இருப்பதெல்லாம் மிகமெல்லிய பிளாங்க் அளவுள்ள அதிர்விழைகள்தான் என்றால், பொருட்களோ, மனிதனோ என்று யாருமே இல்லை. எல்லாமே அதிர்விழைகள்தான். அதாவது எல்லாமே இசைதான். இந்தப் பூமியும், ஒட்டு மொத்த அண்டமும் அதிர்விழைகளால், இசையாக அதிர்ந்து கொண்டிருக்கின்றன. 'ஓம்' என்னும் பிரணவ மந்திரமே பிரபஞ்சம் முழுவதும் பரந்திருக்கிறது என்று இந்து மதம் சொல்வதும், 'முதலில் வார்த்தை இருந்தது' என்று பைபிள் சொல்வதும் இங்குப் பொருந்துகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளலாம். இங்கு நான் சொல்ல வருவது, அறிவியல், ஆன்மீகத்தை சிலசமயங்களில் தொட்டுச் செல்கிறது என்பதைச் சுட்டிக்காட்டத்தான்.

பெருவெடிப்பின் ஆரம்பப் புள்ளியானது குவார்க்குகளாக இருக்கலாம் என்று சொல்லியிருந்தேன். இப்போது குவாண்டம் இயற்பியலின்படி அது மேலும் நுண்ணியதான அதிர்விழைத் துண்டுகளாகவும் இருக்கலாம். அப்படியிருக்கலாமெனில், அந்தப் புள்ளியானது குண்டூசி முனையளவானதாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அப்ப்டியிருந்தாலும், அந்தப் புள்ளி முடிவில்லாத எடையையும், முடிவில்லாத அடர்த்தியையும் கொண்டிருந்திருக்கும். அதன் எடையின் கனத்தினாலும், அடர்த்தியினாலும் உருவான பெரும் வெப்பத்தினால் நிலைகுலைந்து, திடீரென அது வெடித்திருக்கலாம். அந்தப் புள்ளி வெடித்த கணத்திலிருந்து முதல் மூன்று நிமிடங்கள்வரை மிகப்பெரிய அணுஉலையைப் போல, அங்குச் செயல்பாடுகள் இருந்திருக்கின்றன. அங்கு நடந்தது எல்லாமே கதிர்வீச்சுகளாகத்தான் இருந்தன. பின்னர் மெல்ல மெல்ல ஒவ்வொரு உபஅணுத்துகள்களும் உருவாகத் தொடங்கின. மூன்று இலட்சத்து எண்பதினாயிரம் ஆண்டுகளின் பின்பு முதல் எலெக்ட்ரான், ஐதரசன் அணுக்கருவுடன் இணைந்து, அண்டத்தின் முதலாவது அணுவை உருவாக்கியது. அதன் பின்னர் படிப்படியாக நட்சத்திரங்கள், கோள்கள் அனைத்தும் உருவாகத் தொடங்கின. இவையனைத்துமே பெருவெடிப்பின் மூலம் உருவான, பெருவிரிவின் வேகத்துடனே நடந்து கொண்டிருந்தன. பெருவெடிப்பின் வீரியத்தால் விரிவடையத்தொடங்கிய அண்டம் இன்றுவரை விரிவடைந்து கொண்டேயிருக்கிறது.

பேரண்டம் இப்போதும் விரிவடைந்து கொண்டிருக்கிறது என்பதை 1929ம் ஆண்டில் 'எட்வின் ஹபிள்' (Edwin Hubble) என்பவர் கண்டுபிடித்தார். தொலைநோக்கிக் கருவியினால் விண்வெளியை ஆராய்ந்து கொண்டிருந்த ஹபிள், அண்டத்தின் எல்லையில் காணப்பட்ட 'காலக்ஸிகள்' (Galaxies) ஒன்றையொன்று விலகிச் செல்வதை அவதானித்தார். பலூன் ஒன்றில் பேனாவின் மூலம் சுற்றிவரப் புள்ளிகளையிட்டுப் பின்னர் அந்தப் பலூனைப் படிப்படியாகப் பெரிதாக ஊதும்போது, அதில் உள்ள புள்ளிகள் எப்படி ஒன்றை ஒன்று விட்டு விலகிச் செல்லுமோ அப்படி, அண்டத்தின் எல்லைகளில் இருக்கும் காலக்ஸிகளும் விலகிச் செல்கின்றன என்று கண்டுபிடித்தார். மிகத் தொலைவிலிருந்து வரும் ஒளி, நம்மை நோக்கி வந்தால் அது நீலநிறமாகவும், விலகிச் சென்றால் சிவப்பு நிறமாகவும் ஒளிப்பிரிகையடையும் என்னும் கருதுகோள் ஒன்று உண்டு. அதைச் 'செந்நிற விலகல்' (Red Shift) என்று சொல்வார்கள். ஹபிள், நட்சத்திரக் கூட்டங்களை அவதானித்தபோது, அவை சிவப்பு நிற ஒளியுடன் விலகுவது தெரிந்தது. தற்கால விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளும் இதைச் சூப்பர் நோவாக்களின் (Supernova) விலகலை வைத்து உறுதிசெய்து கொண்டார்கள்.

ஆனால், அண்டம் இன்றும் விரிவடைந்து செல்வதற்கு ஆரம்பப் பெருவெடிப்பின் வீரியம்தான் காரணம் என்று நம்பி வந்த விஞ்ஞானிகளுக்குப் பேரதிர்ச்சியொன்று காத்திருந்தது. பெருவெடிப்பின் வீரியம் எந்த அள்வு பெரிதாக இருந்தாலும், என்றாவது ஒருநாள் அது பூச்சியமாக வந்துதான் ஆக வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்குத் தெரியும். ஒரு கிரிக்கெட் பந்தை என்னதான் பலம் கொண்ட அளவுக்கு மேல்நோக்கி எறிந்தாலும், புவியீர்ப்புவிசைக்கெதிராக மேலே செல்லும் பந்து, ஒரு குறித்த இடம்வரை சென்று, மீண்டும் ஈர்ப்புவிசையால் கீழே விழ ஆரம்பிக்கும். அதுபோல, பெருவெடிபினால் ஏற்பட்ட விரிவும் ஒரு நாள் தன் எல்லையை அடைய வேண்டும் என்று விஞ்ஞானிகள் நம்பினார்கள். அதன்பின்னர், அண்டத்தில் உள்ள காலக்ஸிகளின் ஈர்ப்புவிசையினால், அவை ஒன்றையொன்று இழுக்க, மீண்டும் அண்டம் சுருங்க ஆரம்பிக்கும். அப்படிப் படிப்படியாகச் சுருங்கி மீண்டும் ஆரம்பப் புள்ளியின் நிலையை அண்டம் அடையும் என்று கருதினார்கள். இதற்குப் 'பெரிய சுருக்கம்' (Big Crunch) என்று பெயரும் வைத்திருக்கிறார்கள். இந்த நிலைதான் நான் ஆரம்பத்தில் சொன்ன பலூனின் இரண்டாவது நிலை. "எப்படி அண்டம் வெடித்து விரிந்து பெரிதாகியதோ, அதேபோலச் சிறுத்துச் சுருங்கி மீண்டும் புள்ளியாகும்" என்பதுதான் இயல்பு. ஆனால், நடந்ததோ வேறு. நம்பவே முடியாத ஆச்சரியம். இன்றுவரை உலகில் உள்ள அனைத்து அறிவியலாளர்களையும் பிரமிப்புக்குள் வைத்திருக்கும் விடை தெரியாத மர்மம் அது.

ஆரம்பப் பெருவெடிப்பின் பின்னர் அண்டத்தில் நடைபெற்ற காட்சிகளையெல்லாம் நம்மால் இப்போதும் பார்க்கக் கூடியதாகவே இருக்கின்றது. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததையெல்லாம் நம்மால் மீண்டும் பார்க்க முடியும். "என்ன, அவைதான் நடந்து முடிந்து போனவையாயிற்றே! இறந்த காலத்தை நம்மால் எப்படிக் காண முடியும்?" என்று நீங்கள் சிந்திப்பது புரிகிறது. ஆனால் நிஜத்தில் எப்போதும் நாம், 'நிகழ்காலத்தில் நின்றுகொண்டு, இறந்தகாலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்'. இறந்தகாலத்தை நோக்கி நம்மால் நகர முடிவதில்லையேயொழிய, நம் இரண்டு கண்களாலும் அதைப் பார்க்க முடியும். இப்போது நீங்கள் ரொம்பக் குழம்பிப் போயிருப்பீர்கள். அதனால், இதைக் கொஞ்சம் விரிவாகவே நாம் பார்க்கலாம். உங்கள் நண்பனிடம் "உன் வெற்றுக் கண்களால் உன்னால் எவ்வளவு தூரம் பார்க்க முடியும்?" என்று கேட்டுப் பாருங்கள். அவன் ஒரு குறித்த அளவுத் தூரத்தை, அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக் காட்டிப் பதில் சொல்வான். அந்தப் பதில் சரியானது போலவும் உங்களுக்குத் தோன்றும். ஆனால், உண்மையில் நம் கண்களால் நாம் எவ்வளவு தூரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்கிறோம் தெரியுமா? பல பில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களையெல்லாம் நம் கண்களால் பார்க்கிறோம். சூரியன் தவிர்ந்து, நமக்கு மிக அருகாமையில் இருப்பது 'அல்பா செண்டாரி A', 'அல்பா செண்டாரி B' என்னும் இரட்டை நட்சத்திரங்கள். இவை பூமியிலிருந்து 4.3 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கின்றன. அதற்கு அப்புரம் 25 ஒளியாண்டுகள், ஐம்பது ஒளியாண்டுகள், நூறு ஒளியாண்டுகள் தூரத்திலெல்லாம் நட்சத்திரங்கள் இருக்கின்றன. பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள காலக்ஸிகளும் நம் கண்களுக்குத் தெரிகின்றன.

ஒளியானது ஒரு நொடிக்கு 3 இலட்சம் கிலோமீட்டர்கள் பயணம் செய்யக் கூடியது. அப்படியென்றால், ஒளி ஒரு ஆண்டுக்கு எத்தனை கிலோமீட்டர்கள் பயணம் செய்யும் என்பதை நாம் கணிப்பிடலாம். கணக்கிட்டு வருவது எத்தனை கிலோமீட்டர்களோ அதுவே ஒரு ஒளியாண்டுத் தூரம் ஆகும். இப்போது, பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் காலக்ஸிகள் எத்தனை கிலோமீட்டர்களாக இருக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இதை இப்படியும் பார்க்கலாம். நான்கு ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் நட்சத்திரத்திலிருந்து, ஒளி நம் கண்களை வந்தடைய வேண்டுமென்றால், நான்கு ஆண்டுகள் தேவை. அதாவது அந்த நட்சத்திரம் தெரிய ஆரம்பித்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நம் கண்களுக்குத் தெரியும். தற்போது நீங்கள் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால், அந்த நட்சத்திரம் 25 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்குமானால், நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது 25 வருடத்துக்கு முன்னால் இருந்த நட்சத்திரத்தை. இன்று உள்ள நட்சத்திரத்தை அல்ல. அதாவது 25 வருடத்தின் முன்னரான இறந்த காலத்தையே அந்த நட்சத்திரத்தில் காண்கிறீர்கள். அப்படிப் பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள காலக்ஸியொன்று உங்கள் கண்களுக்குத் தெரிந்தால், நீங்கள் பில்லியன் வருடத்துக்கு முன்னால் உள்ள இறந்த காலத்தைப் பார்க்கிறீர்கள். இப்போது அந்த நட்சத்திரம் அங்கு இருக்கிறதா? அல்லது வெடித்துச் சிதறிவிட்டதா? என்று கூட உங்களுக்குத் தெரியாது.

இப்போ புரிகிறதா, நீங்கள் நிகழ்காலத்தில் நின்று கொண்டு இறந்தகாலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று. நமது சூரியன் கூட எட்டேகால் நிமிடங்களின் பின்னர்தான் நம் கண்களுக்குத் தெரிகிறது. நாம் பார்க்கும்போது தெரியும் சூரியன், எட்டேகால் நிமிடங்களுக்கு முன்னரான சூரியன். சூரியனிலிருந்து ஒளி நம்மை வந்தடைய எட்டேகால் நிமிடங்கள் ஆகிறது. நாம் பார்க்கும் அனைத்தும் இப்படித்தான். ஒரு மீட்டர் தூரத்தில் இருக்கும் உங்கள் மனைவியைக் கூட, நானோ செக்கன்கள் இடைவெளிகளின் பின்னர்தான் பார்க்கிறீர்கள். அதே கணத்திலல்ல. நம் கண்களால் பார்ப்பவை எல்லாமே இறந்தகாலம்தான். இதன்படி பார்த்தால், மனிதன் கண்டுபிடித்த தொலைநோக்கிக் கருவிகள்தான், உலகின் முதன்முதலான 'கால இயந்திரம்' (Time Machine) என்று சொல்லலாம். இன்று கண்டுபிடிக்கப்பட்ட நவீன தொலைநோக்கிக் கருவிகளின் தொழில்நுட்பம் வார்தைகளால் விவரிக்க முடியாதது. அப்படிப்பட்ட தொலைநோக்கிக் கருவிகளில் சிலவற்றை விண்வெளிகளில் கூட மிதக்கவிட்டுள்ளார்கள். பூமியின் அட்மாஸ்பியர் என்னும் வளிமண்டலத்தின் வெப்பக்கதிர்த் தடைகள் ஏதும் இல்லாமல் வானிலையை ஆராய்ச்சி செய்வதற்கு இது உதவுகின்றது. இந்தத் தொலைநோக்கிக் கருவிகள்மூலம், பெருவெடிப்பிற்கு 480 மில்லியன் வருடத்தின் பின்னுள்ள 'குழந்தை அண்டத்தைப்' (Baby Universe) புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அதாவது 13 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த அண்டங்களைக் கூட நம்மால் பார்க்க முடிகிறது. யாருக்குத் தெரியும், பெருவெடிப்பின் கணத்தையும் மனிதன் ஒருநாள் பார்த்தாலும் பார்க்கலாம். ஆனால் இன்றுள்ள சூழ்நிலையில் அதைப் பார்க்கவே முடியாது. நவீன தொலைநோக்கிக் கருவிகள்மூலம் பெருவெடிப்பின் விரிவு நடந்த காலங்களைப் படிப்படியாக ஆராய்ந்து கொண்டு வந்த போதுதான் அந்த ஆச்சரியத்தை விஞ்ஞானிகள் கண்டுகொண்டனர்.

பெருவெடிப்பின் பின்னர் உருவான கோடிக்கணக்கான காலக்ஸிகளெல்லாம் அண்டத்தின் விரிவால் விலகிச் சென்ற போதும், காலக்ஸிகளுக்குள் இருக்கும் நட்சத்திரங்களும், கோள்களும் தமக்குள் விலகாமல், ஒரு ஈர்ப்புவிசையுடன் பிணைக்கப்பட்டு. ஒன்றாகவே இருந்து வந்தன. அப்படியொரு விலகல் ஏற்படுமேயானால், பூமி எப்போதோ சூரியனை விட்டு விலகிச் சென்றிருக்கும், அல்லது சூரியன் வேறு நட்சத்திரத்துடன் மோதியிருக்கும். ஆனால், ஒவ்வொரு காலக்ஸியையும் ஒன்றாக இணைத்தும், அதை விண்வெளியுடன் சேர்த்தும், ஏதோ ஒரு சக்தி வைத்திருப்பதை விஞ்ஞானிகள் அவதானித்தனர். அந்தச் சக்தி எதுவென்றே ஆரம்பத்தில் தெரியவில்லை. ஆனால் கண்ணுக்குத் தெரியாத கருமையான ஒரு சக்தியாகவே, அந்தச் சக்தி இருப்பது மட்டும் புரிந்தது. இந்த நேரத்தில்தான் ஐன்ஸ்டைன் கண்டுபிடித்துச் சொல்லிய ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கு உதவியது. விண்வெளியில் இருப்பவைகளின் ஈர்ப்புவிசையின் பலத்தினால், ஒளிகூட வளையும் என்று சொல்லியிருந்தார். இதைக் 'ஈர்ப்பு வில்லை' (Gravitational Lensing) என்பார்கள். இதை வைத்துக் கொண்டு விண்வெளியை ஆராய்ந்தபோது, கறுப்பு நிறத்திலான ஏதோ ஒன்று காலக்ஸிகளை ஒன்று சேர்த்து வைத்திருப்பதைக் கண்டு கொண்டார்கள். அந்தக் கருப்பு நிறப்பொருளையே 'கரும்பொருள்' (Dark Matter) என்று பெயரிட்டு அழைக்கின்றனர். பேரண்டம் முழுவதும் 23% அளவில் இந்தக் கருப்பு சக்தி பரவியிருப்பதை இப்போது கணித்திருக்கிறார்கள். வாயகன்ற ஒரு பாத்திரத்தில் மோட்டார் வாகனத்துக்குப் பயன்படுத்தும் டீசல் எண்ணெய்யை ஊற்றிவிட்டு, அதன் மேற்பரப்பில் மரத்தூளை நீங்கள் தூவினால், எப்படிக் கருத்த டீசல் எண்ணெய் அந்த மரத்தூள்களை சேர்த்து வைத்திருக்கிறதோ, அப்படிக் கரும்பொருளும், காலக்ஸிகளை தன்னுடன் இழுத்து வைத்தபடி இருக்கின்றது. நவீன தொலைநோக்கிகள்மூலம் அவதானித்தபோது, பெருவெடிப்பின் பின், இந்த டார்க் மாட்டரானது காலக்ஸிகளை ஒன்றாக இழுத்து வைத்து அண்டத்தைச் சீராக விரிவடையச் செய்துகொண்டிருந்தது. ஆனால், இந்தச் சீரான விரிவு 9 பில்லியன் ஆண்டுகள் வரைதான் இருந்தது. அதன் பின்னர் நடந்தது இன்னுமொரு பேராச்சரியம்.

விண்வெளி விரிவதை ஆராய்ந்து கொண்டிருந்த விஞ்ஞானிகள் பெரும் ஆச்சரியத்தைத் திடீரெனக் கண்டுகொண்டார்கள். அண்டத்தின் எல்லையில் உள்ள காலக்ஸிகள் சிலவற்றில் காணப்பட்ட சுப்பர்நோவா நட்சத்திரங்களுக்கிடையேயுள்ள தூரங்களை அளந்து எடுத்துக் கொண்டார்கள். அவற்றைக் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் அளந்து கொண்டு வந்தபோது, அந்த ஆச்சரியம் உறுதிசெய்யப்பட்டது. அதாவது, பேரண்டமானது ஒரு குறித்த வேகத்தில் விரிவடைவதற்குப் பதிலாக வேகவளர்ச்சியுடன் (Acceleration) கூடிய மிகை வேகத்துடன் விரிந்து கொண்டே போய்க்கொண்டிருக்கிறது. ஒரு பந்தை, வானத்தை நோக்கி எறிந்தால், அந்தப் பந்தின் வேகம் படிப்படியாகக் குறைந்து பூச்சியமாக வேண்டுமல்லவா? அதற்கு மாறாக, அந்தப் பந்து மேலும் மேலும் வேகவளர்ச்சியடைந்து மேல் நோக்கிச் சென்று கொண்டேயிருப்பது நம்பமுடியாத ஒன்றல்லவா? தொலைநோக்கிக் கருவிகள்மூலம் இதை ஆராய்ந்து பார்த்தபோது, கடந்த நான்கு பில்லியன் வருடங்களாகத் திடீரென இந்த வேகவளர்ச்சி அண்டத்தில் ஏற்பட்டிருப்பது தெரிந்தது. அது எப்படி? எது இந்த வேக வளர்ச்சியைக் கொடுக்கிறது? 'டார்க் மாட்டர்' காலக்ஸிகளை ஒன்றாக இழுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது, இன்னுமொரு சக்தி அவற்றை வேகவளர்ச்சியுடன் விலகச் செய்கிறதே! இந்த ஆச்சரியத்துக்கு என்ன காரணம்? யாருக்குமே இன்றுவரை விடை தெரியாத மர்மம் இது. அண்டத்தை வேகமாக விரிவடையச் செய்யும் அந்தச் சக்தியைத்தான் 'கரும்சக்தி' (Dark Energy) என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்தக் கரும்சக்தி, அண்டம் எங்கும் பரவி, அண்டத்தை நினக்கவே முடியாத அளவு பெரிதாக்கி, முடிவிலியை நோக்கி விரிவடைந்து கொண்டேயிருக்கிறது. இந்தச் சக்தியின் விரிவும் ஒரு நாள் முடிவடைந்து மீண்டும் குறைவடையுமா? அல்லது மேலும் மேலும் விரிவடைந்து கொண்டு போய், ஒரு நிலையில் அந்த விரிவைத் தாங்க முடியாமல், அண்டம் மீண்டும் கட்டுடைந்து உறைந்து போகுமா? எதுவும் தெரியவில்லை. இப்படி விரிவடைந்து கொண்டு சென்று ஒருநாள் அதன் தாக்கம் தாங்க முடியாமல் உருக்குலைந்து போவதை, 'பெரும் குளிர்ச்சி' (Big Chill) என்கிறார்கள். நான் ஆரம்பத்தில் கூறிய பலூனின் முதல் நிலை இதுதான்.

கரும்பொருள், கரும்சக்தி ஆகிய இரண்டுமே இன்றைய விஞ்ஞானிகளுக்குச் சவால் விடும் இரண்டு சக்திகள், இதுவரை இவை எவையென மனிதனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதுவாக இருக்கலாம், இதுவாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் மட்டும்தான் உள்ளனவேயொழிய, உன்மையில் இவை என்னவென்று தெரியவே தெரியாது. இன்றுள்ள கணிப்பின்படி, அண்டம் முழுவதும் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள், காலக்ஸிகள், கருந்துளைகள், க்வேஸார்கள் இன்னபிற பொருட்களெல்லாம் சேர்ந்து, அண்டத்தின் 4% அளவும், கரும்பொருள் என்னும் டார்க் மாட்டர் 23% அளவும், கரும்சக்தி எனப்படும் டார்க் எனர்ஜி 73% ஆகக் காணப்படுகின்றன. கரும்சக்திதான் அதிகமாக அண்டம் முழுவதும் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது.

இன்றைய அறிவியலின்படி கரும்சக்தியும், கரும்பொளும் இருக்கின்றன என்னும் முடிவுக்கு மட்டுதான் நாம் வந்திருக்கின்றோம். இவையிரண்டும் ஒன்றுக்கொன்று வேவ்வேறு எதிர்ச் செயல்களைச் செய்தாலும், இவை ஒன்றோடு ஒன்று தொடர்பானவையா? அல்லது வெவ்வேறானவையா? என்பது தெரியவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் சொல்லலாம். இந்துமதத்தின் சிவனும், சக்தியும் போல இவை இரண்டும் இருப்பது என்னவோ நிஜம். இவை இரண்டும் கருமையாக இருப்பது அந்த நினைப்புக்குகான இன்னுமொரு பலம். இந்தச் சக்திகள்பற்றி ஏற்கனவே தெரிந்திருந்த நம் அறிவுள்ள மூதாதையர்கள், இதை ஏதோ வகையில் குறித்துச் சொல்லியிருக்க, நாம் அதை இந்த விதத்தில் அர்தப்படுத்தியும் இருக்கலாம். எது எப்பிடியிருந்தாலும், கண்களுக்குத் தெரியாத இந்த இரு மாயசக்திகளும் இந்தப் பேரண்டத்தையே வழிநடத்திச் செல்கின்றன என்பதுதான் தற்போதய நிஜம்.

No comments:

Post a Comment